இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ள ஜனாதிபதியின் தீர்மானம்.நாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக அமைவதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஊடகத்துறை அமைச்சராக \
பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து முறையற்ற நிருவாகம் காரணமாக நட்டத்தில் இயங்கிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நடைமுறை நிர்வாகத்தை நீக்கி தகைமையான திறமையுள்ள மற்றும் சிறந்த தலைவரொருவரை நியமிக்க முற்பட்டேன்.
அதற்காக பல சந்தர்ப்பங்களில் நான் முயற்சித்த போதும் நீங்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து அதற்கு தடையாக இருந்தமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனமானது திறைசேரிக்கு சுமையாக மாதாந்தம் ஐந்து கோடிக்கு மேல் நட்டமேற்பட்ட நிறுவனமாக அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. ஊடக மீளாய்வு அறிக்கைக்கிணங்க அந்த கூட்டுத்தாபனம் தற்போது இலங்கை தொலைக்காட்சி சேவைகளில் ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த தொலைக்காட்சி சேவையை நேயர்களின் விருப்பத்தை வெல்லக்கூடியதாக கொண்டு வருவதற்கு தற்போதைய தலைவரினால் முடியவில்லை என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இதற்கு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பெருமளவான ஊழியர்கள் சாட்சி பகிர்வார்கள்.
இவ்வாறான நிலையில் உங்களால் கடந்த 9 ஆம் திகதி 2140/2 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஊடகத்துறை அமைச்சிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளமை சிக்கலான ஒரு விடயமாகும்.
வரலாற்றில் ஒருபோதும், நாடு யுத்தமொன்றை எதிர்நோக்கியிருந்த காலத்திலும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த நிலையில் உங்களது இந்த தீர்மானம் நாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே கருதமுடியும் என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (ஸ)
from tkn