யாழ். கண்காட்சி; சுமார் 50,000 பேர் கண்டுகளிப்பு

யாழ் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா இரண்டாவது நாளான நேற்றுடன் சுமார் ஐம்பதாயிரம் பேர் கண்காட்சி கூடங்களுக்கு வருகை தந்ததாக நிதியமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நேற்று முன்தினம் 07ஆம் திகதி பிரதமர் மற்றும் நிதியமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்றைய தினம் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அசௌகரியங்களை பொதுமக்கள் சந்தித்த போதும், ஆர்வத்துடன் கண்காட்சிகூடங்களுக்கு வருகை தந்ததை காணக்கூடியதாக இருந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாள் ஆரம்பத்தின் போது

விடுமுறை தினம் என்பதால் மக்கள் வருகை அதிகமாகவே காணப்பட்டது.

கண்காட்சிகூடத்தின் முகப்பு பகுதியின் ஊடாக உள்நுழைந்ததும் மக்கள் இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வங்கிகளின் கரும்பீடங்களில் நிறைந்து காணப்பட்டனர். இதன்போது மக்கள் குடும்பங்களாக, குழந்தைகளுடன் கண்காட்சி கூடங்களுக்கு வருகை தந்தனர். சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், இராட்டினம் மற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் காணப்பட்டமையால் பொது மக்களின் வருகை அதிகமாகவே காணப்பட்டது. தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் முகாமிட்டிருக்கும் ஊடகப்பகுதிக்கு பெரும்பாலும் மாணவர்களும் பல்கலைகழக மாணவர்களும் அதிகளவில் கலந்துகொண்டு தங்களது ஆர்வத்தை வெளிக்காட்டினர்.

குறிப்பாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் ஊடக மையத்துக்கு பல்கலைகழக மாணவர்கள் பெருமளவில் வருகை தந்து பத்திரிகைகள் செயற்பாடு தொடர்பாக ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

மூன்றாவது நாளாக இன்றைய தினமும் கண்காட்சி இடம்பெறுகிறது. பெரும்பாலும் மாணவர்களின் வரவு எதிர்பார்க்கப்படுகிறது. முதற்தடவையாக என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற பாரிய தேசிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதால் மக்கள் மத்தியில் ஆர்வம் குடிகொண்டிருப்பதை காணமுடிகிறது.

தினமும் இரவு ஏழு மணி முதல் இசைக் கச்சேரி நடைபெறுவதால் மாலையானதும் பொதுமக்களின் வருகை அதிகமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து ரி.விரூஷன்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை