என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் தற்போது யாழ் கோட்டை முற்றவெளியில் இடம்பெற்று வருகின்றது.
நிதியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியின் மூலம் 10 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் இக்கண்காட்சியின் இன்றைய (08) இரண்டாம் நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) வரை இடம்பெறவுள்ளது.
வடக்கின் தனித்துவமான பல்வேறு துறை தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை வலுப்படுத்தவும் புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதும் இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.
யாழ். மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா துறைகளுக்கு முன்னுரிமையளித்து, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதும் இந்த செயற் திட்டத்தின் நோக்கமாகும்.
இதில் தொழில் முயற்சியாளர்கள் பிரிவு, அரச மற்றும் தனியார் துறை பிரிவு, கல்விப் பிரிவு, பசுமை பிரிவு, புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவு, வணிகப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு ஆகிய பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தினமும் நாட்டின் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn