உப்பாறு பகுதியில் 09 பேர்; பிளக் பொயின்ட், முல்லைத்தீவு பகுதியில் 19 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு கடற்படை பிரிவினால், திருகோணமலையின் உப்பாறு, முல்லைத்தீவின் பிளக் பொயின்ட் ஆகிய கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (28) கிழக்கு கடல் பகுதியில் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உப்பாறு பகுதியில் வைத்து 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் 21 முதல் 60 வரையிலான கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு டிங்கி படகுகள், 02 வெளித்தகன மோட்டார்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையொன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவர்களது உடமைகளுடன் இலங்கை கடலோர காவல்படை மூலம் திருகோணமலை மீன்பிடி உதவி பணிப்பாளரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மற்றும் பிளக் பொயின்ட் பகுதிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்திய 19 பேரை கடற்படை கைது செய்துள்னது. இவர்கள் 28 முதல் 70 வயதுடைய, முல்லைதீவு, மதுரங்குளி, கொட்டந்துடுவ, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகும்.
இவர்களிடமிருந்து 03 டிங்கி படகுகள், 03 வெளித்தகன மோட்டார்கள், 03 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.
சந்தேகநபர்கள் 19 பேரும் அவர்களது மீன்பிடி உபகரணங்களுடன் குச்சவெளி மீன்பிடி பரிசோதகரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கடல் வளங்கள் பாரிய அளவில் அழிவடைகின்றது. இதன் காரணமாக இலங்கைக்கு உரித்தான கடல் வலயத்தில் காணப்படும் கடல் வளங்களை பாதுகாக்க இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
from tkn