இலங்கை அணிக்கான பாதுகாப்பு: சிறப்புக் குழு பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் நோக்கில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஓப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதனையொட்டி அங்கிருக்கும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராயும் வகையில் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு இன்றைய தினம் பயணிக்கவுள்ளனர்.

பாகிஸ்தான் செல்லும் இந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும், இன்று கராச்சியை சென்றடைவதுடன், நாளைய தினம் மைதானங்கள் மற்றும் வீரர்கள் தங்கவுள்ள ஹோட்டல்கள் என்பவற்றின் பாதுகாப்புகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.

அதன் பின்னர், கிரிக்கெட் சபையுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதுடன், அந்தச் சந்திப்பில் லாஹூர் மற்றும் இஸ்லாமாபாத்தின் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஏசான் மாணி தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் நாளைய தினம் (6) கராச்சியை வந்தடையவுள்ளனர். அதன் பின்னர் அவர்கள், இஸ்லாமாபாத் மற்றும் லாஹூருக்கு பயணிக்கவுள்ளனர்” என ஏசான் மாணி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், முன்னணி டெஸ்ட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. குறித்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேச டெஸ்ட் தொடரும் நடைபெறவில்லை. எனினும், சிம்பாப்வே, கென்யா, ஐ.சி.சி உலக பதினொருவர் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததுடன், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளும் குறுகிய தொடர்களுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தன. இவ்வாறான நிலையில் இலங்கை அணி ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர், எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை