சீன தைபேயிடம் இலங்கை கரப்பந்தாட்ட அணி தோல்வி

இலங்கையின் இளம் கரப்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்றிருக்கும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. சீன தைபே அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 3–0 என இலங்கை தோல்வி அடைந்தது.

மியன்மாரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3–1 என்ற செட்களால் போராடி தோல்வியை சந்தித்தது.

நேற்றைய போட்டியின் ஆரம்ப சுற்றில் இரு அணிகளும் வெற்றித் தாகத்துடன் போட்டியிட்டதோடு இரு அணியின் வீரர்களும் மிகவும் உற்சாகத்தோடு நேருக்கு நேர் போட்டியிட்டதை பார்க்க முடிந்தது. இதன்படி கடும் போட்டிக்குப் பின்னர் 26–24 என்ற புள்ளிகளால் சீன தைபே வெற்றியீட்டியது.

இரு அணிகளும் எதிரணியின் ஆட்ட பாணியை புரிந்துகொண்டு இரண்டாவது சுற்றில் நுழைந்த நிலையில் அவதானத்துடன் ஆடியதோடு அந்த சுற்றில் முன்னிலை பெறுவதற்கு சீன தைபே வீரர்களால் முடியுமானது. எனினும் கடைசி வரை கடும் போட்டி நிலவிய இந்த சுற்றில் நூலிழையில் (23–25) வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுகள் இரண்டிலும் குறுகிய இடைவெளில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் மூன்றாவது சுற்றில் கடும் தீவிரத்துடனேயே இலங்கை களமிறங்கியது.

எவ்வாறாயினும் இந்த சுற்று மிகவும் போட்டி கொண்ட ஆட்டமாக மாறியதோடு இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்று சரிசமமாக போட்டியிட்டன. இதனால் கடைசி வரை விறு விறுப்பு நிலை நீடித்தது.

எவ்வாறாயினும் முதல் இரண்டு சுற்றுகள் போன்றே மூன்றாவது சுற்றிலும் இலங்கை அணி கடைசி வரை துரத்தி ஆடிய நிலையில் மீண்டும் ஒரு முறை இரண்டு புள்ளிகளால் அந்த சுற்றையும் இழந்தது. இதில் 26–24 என சீன தைபே வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3–0 என தோல்வியை சந்தித்த இலங்கை அணி நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. இலங்கை வீரர்கள் நாளை தனது முதல் காலிறுதி போட்டியில் ஆடவுள்ளது.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை