ஹொங்கொங் அணிக்கு எதிராக இலங்கை அணி இலகு வெற்றி

இளையோர் ஆசிய கரப்பந்தாட்டம்:

23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் இலங்கை அணி தனது கடைசி குழுநிலை போட்டியில் ஹொங்கொங் அணியை 3–0 என்ற நேர் சுற்றுகளால் அபார வெற்றியீட்டியது.

இதன்மூலம் இலங்கை இளையோர் அணி ஏ குழுவில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டை வெற்றியீட்டியுள்ளது. முன்னதான நேற்று முன்தினம் (04) நடந்த போட்டியில் போட்டியை நடத்தும் மியன்மார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை கரப்பந்தாட்ட அணி 3–1 என்ற நிலையில் வெற்றி பெற்றது. எனினும் தொடரில் முதல் போட்டியில் பலம்மிக்க அவுஸ்ரேலியாவிடம் 3–0 என இலங்கை 23 வயதுக்கு ஊட்பட்ட அணி தோல்வியை எதிர்கொண்டது.

இந்நிலையில் வுன்னா தைக்டி உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் தொட்டே ஹொங்கொங் வீரர்களுக்கு சவாலாக ஆடியது. இதன்மூலம் முதல் சுற்றை இலங்கை அணி 25–17 என இலகுவாக கைப்பற்ற முடிந்தது.

இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஹொங்கொங் வீரர்கள் சற்று நெருக்கடி கொடுத்தபோதும் அது இலங்கை அணியை வீழ்த்துவதற்கு போதுமாக அமையவில்லை. அந்த சுற்றையும் இலங்கை 25–22 என கைப்பற்றியது. மூன்றாவது சுற்று அடத்திலும் இதே நிலை தான் நீடித்தது. அந்த சுற்றையும் இலங்கை 25–22 என்ற புள்ளிகளால் வென்றது.

3ஆவது முறையாக நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் குழுநிலை போட்டிகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் இரண்டாம் சுற்று, நிரல்படுத்தும் சுற்றுப் போட்டிகள் மற்றும் சம்பியன் அணியைத் தீர்மானிக்கின்ற போட்டிகள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை