ரஷ்யாவில் எதிர்த்தரப்பினரின் போராட்டத்துக்கு அங்கீகாரம்

 ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் அடுத்த மாதம் 8ஆம் திகதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சியினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்தை பொலிஸார் தடுத்திருந்தனர்.

அங்கீகரிக்கப்படாத பேரணியில் ஈடுபட்டதாக கூறி சுமார் 1,500 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட போதும், ஒரு சிலரை தேர்தல் முடியும் வரை சிறையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த ஒடுக்கு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஓகஸ்ட் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் மாத்திரம் அமைதியான பேரணிகளை நடத்த அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மொஸ்கோ நகரம் ஸ்தம்பிதமடைந்தது. போராட்டத்தின்போது மழைபெய்தபோதும் போராட்டங்காரர்கள் எதனையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட போராட்டம் என்றபோதிலும், போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 130-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை