தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் செயல்

13இற்கு அப்பால் அரசியல் தீர்வு - மஹிந்த ராஜபக்‌ஷ

“புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் செயற்பாட்டை பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பே கடுமையாக எதிர்த்துவருகையில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவேனென மஹிந்த கூறுவதன் நோக்கம், தேர்தலை இலக்குவைத்து மீண்டும் தமிழர்களை ஏமாற்றுவதற்காகும்”

இவ்வாறு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரம் உட்பட ஒட்டுமொத்த அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 13இற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவேன் எனக் கூறவதை நம்புவதற்கு தமிழர்கள் தயாராகவில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போது, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரப்பகிர்வை வழங்கத், தாம் சிந்திப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஒத்துழைப்பை வழங்காமையாலே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது போனதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக இரண்டு வருடத்திற்கு அதிகமாக எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏமாற்றியிருந்தார். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகவும் கூறிய அவர், 18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் உட்பட ஒட்டு மொத்த அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது. எம்மை மஹிந்த ராஜபக்ஷ ஏமாற்றியிருந்தார் என்பதே உண்மை. தற்போதுகூட புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளை பாராளுமன்றில் அவரின் தரப்பே கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவரின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாரில்லை என்றார்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து வெளியிடுகையில்,

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுடன் 18 முறை போச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். நாங்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தயாராகவிருக்கவில்லை.

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது. இவர்கள் முன்மொழிந்த கோரிக்கைகளைக் கூட நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ தயாராகவிருக்கவில்லை.

எனது ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கையெடுத்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை. அரசாங்கத்துடன், இணைந்து அவர்கள் எதனை சாதித்துள்ளனர் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை வலுப்படுத்த போக்குவரத்து பொலிஸ் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்திருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்மை மற்றும் ஆட்சிமாற்றத்தால் இவற்றை செய்ய முடியாது போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சில தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பில், ஈ.பி.டி.பியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா, வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், தமிழர் மகா சபைத் தலைவர் விக்னேஸ்வரன், ஸ்ரீ ரெலோவின் தலைவர் உதயராசா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் உட்பட 11 பேர் தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, தமிழ் மக்கள் சமகாலத்தில் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினை, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தரப்பு எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளது.

இவர்களுக்குப் பதிலளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்,

10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தற்போதைய அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. கிராமங்கள் தோறும் இலவச என செய்ய முடியாத பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. எனவே, தேர்தல் காலத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்களுக்கு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். அவை தொடர்பில் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். 19ஆவது திருத்தச்சட்டம் நாட்டுக்கு சபாக்கேடானது. இதனால் பாரதூரமான விளைவுகளை சந்தித்துள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்ததும் முதலில் இந்தச் சட்டத்திருந்தத்தை நீக்குவோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை