இரணைமடுக்குளத்தில் நீர் வற்றியதால் நெருக்கடி

கிளிநொச்சி மாவட்ட தேசிய  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம்  17 கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் வழி மூலம் வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர்   விநியோகத்தில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  சபையின் மாவட்ட பொறியியலாளர் என். நவரூபன் தெரிவித்தார்.

இரணைமடுக்குளத்தில் இருந்து இடது கரை வாய்க்கால் மூலம் கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படுகின்ற நீர்  சுத்திகரிக்கப்பட்டு, 17 கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் வழி குடிநீர் விநியோகமும், மேலும் பல கிராமங்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் நீர் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஆனால், தற்போது இரணைமடுக்குளத்தில் நீர் மட்டம்  ஒன்பது அடிக்கு கீழ் காணப்படுவதனால் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் வழங்கப்படுகின்ற குடி நீர் விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, இதனை கருத்தில் கொண்டு தற்போது இரண்டு நாளைக்கு ஒரு தடவையாக நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வரட்சியான  நிலைமை நீடித்தால் அது மூன்று நாளைக்கு ஒரு தடவையாக மாற்றப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.

700 மீற்றர் கியூப் நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் அரைவாசி அதாவது 350 மீற்றர் கியூப் நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது எனவும் அவர்  தெரிவித்தார்.

மேலும், தங்களால் வழங்கப்படுகின்ற நீர் சேற்று மணத்துடன் தேநீரின் நிறத்துடன் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்குரிய காரணம் என்னவென அவரிடம் வினவியபோது, பதிலளித்த அவர்,

குளத்து நீர், அடி மட்டத்திற்கு சென்றுவிட்டதனால் நீர் மிக மோசமாக கலங்கிய நிலையில் காணப்படுகிறது. இந்நீரை பெற்றே சுத்திகரிக்கின்றோம். அதனையும் 350 மீற்றர் கியூப் நீரையே சுத்திகரிக்கின்றோம். இருப்பினும் இந்த நிலை காணப்படுகிறது. எனவே பொது மக்கள் நீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

(கிளிநொச்சி குறூப் நிருபர்– முருகையா தமிழ்செல்வன்)   

 

Sat, 08/17/2019 - 11:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை