பிரேசிலின் அமேசான் காடுகளில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரிப்பு

புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் மழை காடுகளின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இது 83 வீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

நாட்டில் பல பகுதிகளில் புகையால் சூழப்பட்டுள்ள நிலையில் மனாஸ் நகரில் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையும், பெரு நகரில் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வரண்ட வானிலையில் காட்டுத்தீ பரவுவது இயல்பு என்றபோதிலும் சில விவசாயிகள் பண்ணைகள் அமைப்பதற்காக வேண்டுமென்றே தீ வைத்து சட்டவிரோதமாக காடுகளை அழித்து வருவதாகவும் பிரேசில் ஜனாதிபதி ஜைர் போல்சோனரோவின் சுற்றுச்சூழல் கொள்கையினால் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் ஜனாதபதி போல்சோனரோ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிர்வாக தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலும் அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என்றார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை