பிஃபாவின் விதிமுறைகளை மீறிய மான்செஸ்டர் சிட்டிக்கு அபராதம்

கால்பந்து வீரர்களை விற்பது, வாங்குவது, 18 வயதுக்கு குறைந்த வீரர்களைப் பதிவு செய்வது ஆகியவற்றில் விதிமுறைகளை அத்துமீறியதாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மான்செஸ்டர் சிட்டி அணி ஒப்புக்கொண்டுள்ளது.

உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பான பிஃபா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்தில் வீரர்களை விற்க, வாங்க சிட்டிக்கு தடை விதிக்க வாய்ப்பு இருந்தது.

ஆனால், அதற்குப் பதிலாக அவ்வணிக்கு 315,000 பவுண்ட் அபராதத்தை பிஃபாவின் ஒழுங்குமுறை நடவடிக்கைக் குழு விதித்துள்ளது.

தண்டனை விதிப்பதில், மான்செஸ்டர் சிட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டது கருத்தில்கொள்ளப்பட்டதாக பிஃபா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மத்திய கள வீரர் பெஞ்சமின் காரேவை ஒப்பந்தம் செய்தது தொடர்பில் சிட்டி தவறிழைக்கவில்லை என்று கடந்த ஆண்டு பிஃபா தீர்ப்பளித்திருந்தது. பெஞ்சமின் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அவருக்கு 16 வயது பூர்த்தியானது. மற்றொரு சம்பவத்தில், வீரர்கள் ஜேடன் சாஞ்சோவின் முகவருக்கு 200,000 பவுண்ட் மதிப்பிலான பணத்தை சிட்டி செலுத்தியதாக எழுந்த புகார் குறித்து தான் விசாரணை நடத்துவதாக இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் கடந்த பெப்ரவரியில் கூறியிருந்தது. வாட் பர்ட் அணியில் அப்போது விளையாடிக்கொண்டிருந்த சாஞ்சோவுக்கு வயது 14 மட்டும்தான்.

இளம் வீரர்களுக்கு 16 வயது பூர்த்தியாகும் வரை முகவர் ஒருவர்் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது என்று கால்பந்துச் சம்மேளனத்தின்் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிட்டியிலிருந்து பின்னர் விலகிய சாஞ்சோ, ஜெர்மனியின் பொருஷியா டோர்ட்மண்ட் அணியில் இணைந்தார். இப்போது இங்கிலாந்து தேசிய கால்பந்துக் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இளம் வயது வீரர்களை அணியில் சேர்ப்பது தொடர்பில் விதிமுறைகளை அத்துமீறிய குற்றத்தை செல்சி அணியும் முன்னதாக ஒப்புக்கொண்டது. வீரர்களை வாங்குவது, விற்பது தொடர்பில் செல்சிக்குக் கடந்த பெப்ரவரியில் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பிஃபாவின் விதிமுறைகளை அத்துமீறியது தொடர்பில் ஸ்பெயினின் பார்சிலோனா, ரியல் மட்ரிட், அட்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கும் வீரர்களை வாங்க, விற்க முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை