நல்லிணக்கத்தின் மீதான தமிழ் மக்களது நம்பிக்கையை நீக்கியது

இராணுவ தளபதியின் நியமனம்

புதிய இராணுவத் தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை நீக்கியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய செயலாளரிடம் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமி ஓ பிரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு.சந்திரகுமாரை கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இதனை கூறினார்.

இச் சந்திப்பில் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளின் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர்.

குறிப்பாக நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்கள் உட்பட பல இடங்களின் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இடம்பெறுகின்றமை, நல்லிணக்கச் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்துகிறது எனச் சுட்டிக்காட்டினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் உருவாக்கப்பட்டமை மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுகின்றமை, அவர்களுக்கான நீதியான தீர்வுகள் காணப்படாமை தொடர்பாகவும் இதன்போது அவர் எடுத்துரைத்தார்.

இச் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறித்த அலுவலகத்தின் மூலம் இதுவரை ஆரோக்கியமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இது நல்லிணக்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தவிர புதிய இராணுவத் தளபதியின் நியமனமும் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்திருக்கிறது.

இதனைத் தவிர கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை.

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் வகையில் பெயர் குறிப்பிட்டு நீதிபதிகளை நியமிக்கும் அளவுக்கு காணப்பட்ட சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் இரண்டு தரப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்தே காணப்படுகின்றனர். எனவே இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் பற்றி எதனையும் கூற முடியாது எனவும் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை