ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்சிப்பை வெல்ல இலங்கை அணியின் திட்டம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே எதிர்பார்ப்பதாக இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.

காலியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

அதேபோன்று இந்த வெற்றி மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 60 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதற்கும் இலங்கை அணியால் முடிந்தது. எனினும் 2021 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை அணியின் திட்டம் பற்றி கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன,

“டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் போட்டிக்கு போட்டி தான் நாம் திட்டமிடுகிறோம். இரண்டாவது ஆண்டு முடியும்போது நாம் எங்கே இருப்போம் என்று இப்போதே எம்மால் கூற முடியாது. இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே நாம் முயல்கிறோம்.

அப்போது வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் அந்தந்த அணிகளுக்கு அமைய எவ்வாறு விளையாடுவது, போட்டியை வெல்ல முடியுமா, சமநிலை செய்ய முடியுமா என்பது பற்றி திட்டமிட நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டி உள்ளது.

இப்போது நாம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்திருக்கிறோம். எதிர்வரும் போட்டிகளில் வென்று இரண்டு ஆண்டுகளில் அந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவே நாம் எதிர்பார்க்கிறோம்” என்று காலி டெஸ்ட் போட்டி முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திமுத் குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டு காலத்தைக் கொண்டதான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் கடந்த ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுடன் ஆரம்பமானதோடு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்தக் காலப்பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் இரு அணிகள் சம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளன.

இந்நிலையில் அணிக்கு அதிக உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் தான் வழங்கி இருப்பதாகவும் திமுத் கருணாரத்ன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை