காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதான வீதியில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஏறாவூரில் இருந்து அமீர் ஹாஜி எனும் வர்த்தகரின் கோழிகளை ஏற்றிக்கொண்டு காத்தான்குடிக்கு புறப்படுகையில் நாவற்குடா பிரதான வீதியிலே விபத்து ஏற்பட்டுள்ளது.
நாவற்குடா விவேகானந்தா மைதானத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில்; கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய லொறியின் சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நாவற்குடாவில் வைத்து முன்னால் சென்ற டிப்பர் வாகனத்துக்கு டயர் வெடித்த நிலையில் பின்னால் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மோதியுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களை பொது மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் சென்று ஆரம்ப கட்ட விசாரணைகளை நடாத்தினர்.
ஏறாவூரைச் சேர்ந்த பதுறுதீன் ஹில்மி ஹசன் (25) பதுறுதீன் அகமட் றிஸ்மி (20) தாவூத் லெப்பை அப்துல் முனாப் (28) ஆகிய மூவருமே இதில் காயமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதியான ஹில்மி ஹசன் மற்றும் அப்துல் முனாப் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் காயமடைந்தவரும் ஏறாவூர் முதலாம் குறிச்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மேற்படி கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஏறாவூரைச்சேர்ந்த லொறி எனவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன் பகுதியும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் இந்த லொறியிலிருந்த சில கோழிகளும் இறந்துள்ளன.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக செல்லும் கனரகவாகனங்களின் டயர் வெடிப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தை அதிக உயிரிழப்பை கொடுத்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.இதே போன்று சில ஆண்டுகள் முன் சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்கள்மீது வாகனங்களின் டயர் வெடித்து வாகனங்களின் வேகத்தை நிறுத்தமுடியாமல் வீதியிலிருந்த மக்களை ஏறிமிதித்து கொன்ற சம்பவமும் குறிப்பிடத்தக்கதாகும்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், கல்லடி குறூப் நிருபர் - உதயகாந்த் உதயகுமார், வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம்)
from tkn