இஸ்லாம் காட்டிய உயர்ந்த நெறிமுறையில் பயணிக்க வேண்டும்

மனித நேயத்தை முன்னிறுத்தி சமூக இணக்கப்பாடுகளில் இஸ்லாம் காட்டிய உயர்ந்த நெறிமுறையில் சரியான பாதையுடன் இந்நாட்டு முஸ்லிம்கள் இன்னும் பிரகாசிக்க வேண்டும் என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு. ஹலீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இந்நாட்டில் வாழும் பிற இனங்களுடன் புரிந்துணர்வுடனும் நேச மனப்பான்மையுடனும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட எமது முஸ்லிம்கள் தேசிய நலனுக்காக பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள். இதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

இக்கட்டான கால கட்டத்தில் கூட முஸ்லிம்கள் சகிப்புத் தன்மையோடு மிக நிதானமாகவும் தூரநோக்கோடும் பிற இன மக்களுடன் பரஸ்பர நல்லுறவைப் பேணி வந்துள்ளனர்.

எனவே தியாகத்தையும் சகிப்புத்தன்மையையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டுகின்ற இன்றைய ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இந்நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் எதிர்கால சுபீட்சத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து எமது சமூகமும் ஒற்றுமை என்கின்ற தூய்மையான காற்றை தினமும் சுவாசிக்க வேண்டும். இது என்னுடைய திடமான எதிர்பார்ப்பாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நாட்டிலுள்ள சகல முஸ்லிம் மக்களுக்கும் இந்த இனிய நன்நாளில் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

மாவத்தகம தினகரன் நிருபர்

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை