ஜனாதிபதி தேர்தலில்: தமிழ் தரப்பு ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும்

நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றம் பணத்திற்காக நடந்தது. எனவே இம் முறை தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு- கிழக்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாகவுள்ளது. ஆனால் எங்களுக்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்தியுள்ளோம் என்பது விமர்சனத்துக்குரியது.

கடந்த 10 வருட காலமும் எங்களது இளைஞர் யுவதிகளின் வாழ்விற்காக, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்காக, எமது மக்களின் உரிமைக்காக இந்த தமிழ் தலைமைகள் எவ்வளவு தூரம் இராஜதந்திர ரீதியாக நடந்திருக்கின்றார்கள் என்பது பல்வேறுபட்ட விமர்சனத்திற்குரியது.

எங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் எங்களது கையில் வந்துள்ளது.

இன்னும் நான்கு மாத காலத்திற்குள் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கிறது. இந்த நாட்டினுடைய அடுத்த ஜனாதிபதி யார் என்பது தமிழர்களுடைய கையில தான் தங்கியுள்ளது. நாங்கள் அளிக்கப் போகும் வாக்கு தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கப் போகிறது. ஆகவே அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் எப்படி பயன்படுத்தப் போகின்றோம்.

இன்றைக்கு பல்வேறுபட்ட கூறுகளாக இருக்கும் நாங்கள் குறைத்த பட்சம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து கடந்த 60, 70 வருடமாக இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகள், அட்டூழியங்களில் இருந்து மீண்டேழ வேண்டுமாக இருந்தால் காத்திரமான முடிவெடுக்க வேண்டும்.

இந்த நான்கு வருட காலமும் அதை சரியான முறையில் பயன்படுத்த தவறியிருக்கிறார்கள். ஆகவே எங்கள் முன்னுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தான் விக்கினேஸ்வரன் ஐயா தலைமையில் எம்மை போன்ற தோழமைக் கட்சிகள், கொள்கைளை ஏற்றுக்கொளகின்ற பலரும் சேர்ந்து செயற்பட வண்டிய தேவை இருக்கின்றது என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை