பிள்ளையான் மீதான தடைச் சட்டத்தை நீக்கக்கோரி பேரணி

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் நேற்று (18) பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம் பெற்றது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவில் ஒன்று சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, கிழக்கை மீட்க பிள்ளையானை விடுதலை செய், விசாரணையை துரிதப்படுத்து என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகம் வரை சென்று அங்கு முடிவடைந்தது. இந்தப் பேரணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் , மகளிர் பிரிவு தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை