நாடுதிரும்பும் இலங்கை அகதிகள் மீண்டும் அகதிகளாக வாழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் மீண்டும் அகதிகளாக வாழ்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ் (Sarat Dash)யிடம் தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ் (Sarat Dash) வடமாகாண ஆளுநரை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச் சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் தமது அமைப்பிடம் உள்ளதாகவும், இதனை முன்னெடுக்கும் போது எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவதால் அகதிகளை அழைத்து வருவதில் தாமதங்கள் தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவித்த சரத் டோஷ், இதற்கு உதவுமாறு வடக்கு ஆளுநரை கேட்டுக்கொண்டார். இதன்போது ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கு (IOM) உதவி புரிவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அகதிகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது இடங்களுக்கு திரும்புவதற்கு முழுமையாக உரிமை உள்ளதென்றும் அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பும்போது அவர்களுக்கு தேவையான வசதிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஆளுநர், மீண்டும் இலங்கையில் அவர்கள் அகதிகளாக வாழ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

 

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை