கல்முனை விவகாரம்: கூட்டமைப்பை நம்பி எவ்வித பயனும் இல்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேசி கல்முனைப் பிரச்சனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வைப் பெற்றுத்தராதென கிழக்கு தமிழர் கூட்டமைப்புத் தலைவர் செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். கல்முனை நிலைவரத்தின் சமகால நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இங்கு கருத்துரைத்த அவர் :

கல்முனை வடக்கு பிரதேசசெயலக விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பிப்பயனில்லை. தமிழ்ச் சமுகமே இப்பிரச்சினையை கையிலெடுக்க வேண்டும்.

சேலையில் முள்ளுப்பட்டாலும் முள்ளு சேலையில் பட்டாலும் சேலைக்கே சேதம் . இதேபோல சம்பந்தன், ஹக்கீமுடன் கதைத்தாலும் ஹக்கீம் சம்பந்தனுடன் பேசினாலும் தமிழ்மக்களுக்கே நஷ்டம். கடந்த 70 வருடகால தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றிலிருந்து கிழக்குத் தமிழர்கள்

கற்றுக் கொண்ட அனுபவமும் இதுவே.

கல்முனையிலிருந்து கொழும்புக்குச் சென்ற மாநகரசபை தமிழ் உறுப்பினர்கள் நால்வர், கல்முனை தமிழ் மக்களின் இதயத்தை விற்றுவிட ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு எத்துணை கையூட்டல்கள் வழங்கப்பட்டதோ தெரியாது. இத்தகைய விட்டுக் கொடுப்பைச் செய்ய இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? கொழும்பில் இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்களா?

இருபக்கமும் சேதமில்லாமல் தீர்வு காண்பதானால் இருசாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

கடந்த 30 வருடகாலமாக பல போராட்டங்களை நடாத்திய கல்முனைத் தமிழ் மக்கள் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அண்மையில் உயிரை துச்சமென மதித்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டது எதற்காக? ஒரு கணக்காளரைப் பெறுவதற்கா?

கணக்காளரை யார் கேட்டது? கடைசியில் அதுகூட இல்லை என்ற கையறுநிலைக்கே நிலைமைகள் சென்றுள்ளன. தேர்தலுக்காக கல்முனை விவகாரத்தை துரும்பாக பயன்படுத்துவதை அனுமதியளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

(காரைதீவு குறூப் நிருபர் )

 

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை