வடக்கு, கிழக்கு மாகாண உரிமை பிரச்சினையில் இனி தலையிடேன்

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடக்கு,கிழக்கு மக்களின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் ஏனைய சில கட்சிகளின் தமிழ் எம்.பிக்கள் கலந்துகொள்ளாமையை பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது. அனைவராலும் கலந்துக் கொள்ள முடியாமை பற்றி நான் எனது கவலையை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற  நேர்காணலில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் மனோ கணேசன் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மனோ மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியுடனான சந்திப்பு உண்மையில் 11.30 க்கு ஆரம்பமாக வேண்டியிருந்தது. அரை மணி நேரம் தாமதித்து 12 மணிக்கே கூட்டத்தை ஆரம்பித்தோம். எனது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி தமது அறையில் காத்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் எம்.பிக்கள் வருவார்கள் என நாமும் காத்திருந்தோம். அமைச்சர் பழனி திகாம்பரம், எம்.பிக்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் என்னுடன் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். குறைந்தபட்சம் இன்னொரு சகோதர சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்று கூடுவதை நினைத்து நாம் மகிழ வேண்டியுள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டம், அவசர பிரச்சினை யொன்றுக்காக நடைபெற்ற கூட்டம். அனைவருக்கும் ஏதோ ஒரு முறையில் அவசர அழைப்பு தகவல் அனுப்பப்பட்டது, பரிமாறப்பட்டது, ஊடகங்களிலும் கூறப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எம்.பிக்கள் ஸ்ரீதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ள இயலாமை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்கள். அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பிக்கள் அரவிந்த குமார், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நாட்டில் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்.பி முத்து சிவலிங்கம் சுகவீனம் என கூறப்பட்டது. எம்.பி சுவாமிநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஏனையோர் பணிப்பளு காரணமாக கலந்துக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.

எது எப்படி இருந்தாலும், எனது அமைச்சின் பணி வடகிழக்கில் தொடரும். இவை பற்றி நானே முடிவு செய்வேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னேரே, முதற்கட்டமாக, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும், பின் அது தமிழ் பேசும் பாராளுமன்ற ஒன்றியமாக விரிவு படுத்தப்பட்ட வேண்டும் என நான் பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன். இந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசாங்கம், சிங்கள கட்சிகள், பெளத்த தலைமைகள், சர்வதேச சமூகம் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன்.

புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை என இந்த அரசாங்கத்தில் இருந்துக்கொண்டே கூறியிருந்தேன். இவை இன்று உண்மைகளாகி விட்டன. எனினும் இவற்றுக்கு இன்று காலம் கடந்து விட்டது. விரைவில், ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவார் என நம்புகிறேன்.

 

 

Sat, 07/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை