மூன்றாவது அணியாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தெரிவு

நியூசிலாந்து அணியை 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து உலகக் கிண்ண அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டி செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து 123 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது ஜேசன் ராய் 60 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்து 106 ஓட்டங்கள் எடுத்திருந்து நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் குவித்தது.

306 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர்கள் நிக்கோலஸ் ஓட்டம் எதுவும் எடுக்காமலும், மார்டின் குப்தில் 8 ஓட்டங்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்பின் இறங்கிய அணியின் தலைவர் வில்லியம்சன் 27 ஓட்டங்களில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் அடித்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் மார்க் வூட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்துக்கு ஏதிரான இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை