தேசிய குத்துச் சண்டையில் மிகக்குறைந்த வயதில் வவுனியா மாணவன் சாதனை

தேசிய ரீதியில் நடைபெற்ற 'கிக் பொக்சிங்' குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் பங்குபற்றி வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் ஆர்.கே. மைக்கல் நிம்றொத் என்ற மாணவன் தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு 2019 ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

அம்பாறையில் ஜூன் 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான 'கிக் பொக்சிங்' குத்துச்சண்டை போட்டியில் ஏழு வயதுக்குட்பட்ட 15 இலிருந்து 20 கிலோ கிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தை சுவிகரித்து வடக்கு மாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் குத்துச்சண்டையில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை ஆர்.கே. மைக்கல் நிம்றொத் தனதாக்கி கொண்டுள்ளார்.

இதன் மூலம் வடமாகாணத்திற்கும் அவர் கல்விபயிலும் பாடசாலைக்கும் பயிற்றுனருக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

இலங்கை பிரான்ஸ் 'சவேட்' அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய மற்றும் சர்வதேச குத்துச்சண்டை பயிற்றுனர் மற்றும் இலங்கை பிரான்ஸ் 'சவேட்' தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இக் குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கோவில்குளம் குறூப் நிருபர்

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை