மக்களின் வறுமையை போக்குவதற்கும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளித்து செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை நேற்று (05) முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“மைத்திரி ஆட்சி - நிலையான யுகம்” எழுச்சிபெறும் பொலன்னறுவை 2016, - 2020 ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காக மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் மற்றும் அபிவிருத்தி வசதிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.
நாட்டு மக்கள் கல்வியறிவுடையவர்களாக இருந்தால் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும்போது பிள்ளைகளை நாட்டை நேசிக்கும் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
பொலன்னறுவை, கவுடுல்ல மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் நேற்று முற்பகல் ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கல்அமுன மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 06 வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடி கட்டடம், மீகஸ்வெவ கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டடம் ,அம்பகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் கூடிய புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.
from tkn