சிசேரியன் பிரசவத்தின் சாதக பாதகங்கள்

சிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதில் சில தீமைகள் ஏற்படும் சாத்தியமும் உள்ளது. இருந்தும் சிசேரியன் பிரசவம் இன்றைய காலகட்டத்தில் பெரிதும் பிரபலமடைந்துள்ளது. சுகப் பிரசவத்திற்கு சாத்தியமுள்ள பெண்கள் கூட சில சந்தர்ப்பங்களில் இந்த அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.  

சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் இன்றியமையாதவை. இப்பிரசவ முறையைச் சரியான காரணத்திற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் பட்சத்தில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடியும். எனினும், ஒரு தாயால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றால் அதுவே சிறந்த வழியாகும். சிசேரியன் பிரசவத்தில் சில குறிப்பிடத்தக்க நல்ல பலன்களும் உள்ளன.  

பிரசவத்தின் போது சில சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இறுதி நேரத்தில் தாய் மற்றும் சேயைக் காப்பாற்றுவதற்கு இப்பிரசவ முறையே சிறந்த வழியாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் மாற்றுக்கருத்தின்றி இவ்வகைப் பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஏதாவது மருத்துவ சிக்கல் காரணமாக அறுவை சிகிச்சைப் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டால் கர்ப்பிணிப் பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறான சூழல்களில் அறுவை சிகிச்சை பிரசவம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும். 

பிறக்கும் குழந்தையை இவ்வகைச் சிகிச்சை பிரசவம் அதிர்ச்சி ஏற்பட செய்யாமல் சுலபமாகப் பிறக்க உதவும். பிரசவம் சற்று சிக்கலான சூழலில் வயிற்றிலிருக்கும் சிசு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றது. இச்சூழலில் சிசேரியன் பிரசவம் குழந்தையை அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வழி வகை செய்கிறது. 

இப்பிரசவ முறை, நோய்த் தொற்று ஏற்படாமல் தாயும் சேயம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கவும் உதவும். பிரசவம் தாமதமாக ஆக, பனிக்குடம் உடைந்து விட்ட சூழலில் நோய்த்தொற்று அபாயம் உள்ளது. இச்சூழலில்தான் அறுவை சிகிச்சை பிரசவம் கை கொடுக்கின்றது. 

பிறக்கும் குழந்தை சரியான நிலையில் இல்லாமல் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை முறை நல்ல தீர்வைத் தரும். இதனால் தாய்க்கும் சேய்க்கும்  எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க இப்பிரசவம் உதவும். இவ்வகைப் பிரசவத்தால் சரியாகத் திட்டமிட்டுச் சரியான நேரத்தில் குழந்தை பிறக்க வழி வகை செய்யலாம்.  இது சிக்கல் இன்றி குழந்தை பிறக்க வழிவகுக்கும்.  

கருவுற்றிருக்கும் தாய்க்கு ஏதாவது உடல் உபாதைகள், உதாரணமாக உயர் குருதி அழுத்தம் அல்லது நீரிழிவு போன்று நோய்கள் இருந்தால் தாயையும் சேயையும் பாதுகாக்க இப்பிரசவ முறை சிறந்தது. 

என்றாலும் சிசேரியன் பிரசவத்தில் தீமைகளும் இருக்கவே செய்கின்றன. அதாவது இப்பிரசவ முறையில்  நன்மைகள் இருப்பது போன்று சில தீமைகளும் அசௌகரியங்களும் இருக்கின்றன.

இப்பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் முன் அது தொடர்பில் தெரிந்து கொள்வது நல்லது.  

சுகப் பிரசவத்தை ஒப்பிடும் போது இப்பிரசவ முறையால் சில மோசமான உடல் உபாதைகளும் பிரச்சினைகளும் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக்கூடும். இவ்வகை பிரசவத்தை மேற்கொண்ட பெண்கள் வழமையான உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்ள சிறிது காலம் எடுக்கும்.

குறிப்பாக சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பிரசவித்தவர்களுக்கு கூடுதலாக முதுகு வலி, நோய்த் தொற்று, உடல்எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல உபாதைகள் ஏற்படலாம். அதனால் இவ்வகை பிரசவம் பெண்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.  

அதேநேரம் குழந்தை சரியான நேரத்தில் அல்லாமல், குறித்த பிரசவ காலத்திற்கு முன்னரே வெளியே வந்து விடுவதால், சுவாச பிரச்சினை மற்றும் முழுமையாக வளர்ச்சி அடையாது இருத்தல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியங்களும் உள்ளன.  

இவ்வகையில் குழந்தை பிறந்தவுடன் சில சமயம் தாயிடம் கொடுக்க மாட்டார்கள். அறுவை சிகிச்சை மூலமாகப் பிறக்கும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கின்றனர். இதற்கு பலவிதக் காரணங்கள் இருக்கலாம். அவற்றில் குழந்தை எடை குறைவாக இருப்பது மிக முக்கிய காரணியாகும். அதனால் குழந்தையைச் சில நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அதன் உடல் நல்ல ஆரோக்கிய நிலைக்கு வந்த பின்னரே தாயிடம் வழங்குவர். 

சில சமயம் குழந்தை எடை குறைவாகப் பிறக்கக்கூடும். சராசரி எடையை விடக் குறைந்த எடையோடு குழந்தை பிறக்கும் போது சில பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக முழுமையாக வளர்ச்சி பெறாமல் பிறப்பதால் குழந்தை இறந்துவிடக்கூடிய அபாயமும் உள்ளது. அத்தோடு இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வளர வளர எடை குறைபாட்டால் பலவித ஆரோக்கியப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளலாம்.  

மேலும் சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணை சுகப் பிரசவமான பெண்ணோடு ஒப்பிடும் போது அப்பெண்மணியால் விரைவாகத் தன்னுடைய இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. அப்பெண்ணுக்குக் குறைந்தது 6மாதங்கள் முதல் ஒரு வருட காலம் வரையும் உடல் ஆரோக்கியம் அடையத் தேவைப்படும். அதுவரையிலும் பிறரின் உதவி அப்பெண்மணிக்கு தேவைப்படும். அவர்கள் எந்தக் கடினமான வேலைகளையும் செய்யக் கூடாது. குறிப்பாக படிக்கட்டுகள் ஏறுதல், வாகனம் ஓட்டுதல், அதிக நேரம் நடத்தல், கனமான பொருட்களைத் தூக்குதல் என்று எந்தக் கடின வேலைகளையும் செய்ய முடியாது. ஆனால் சுகப் பிரசவம் பெற்ற பெண்கள் விரைவாகத் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதோடு குறுகிய காலத்திலேயே அடுத்த குழந்தைக்கும் திட்டமிடலாம். 

மேலும் முதல் குழந்தை அறுவைசிகிச்சை பிரசவத்தால் பிறந்தால் அடுத்த குழந்தையும் அப்படியே பிறக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே உள்ளது. எனினும் இதன் விகிதம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்படும் மருந்தால் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் தாய்ப்பால் கொடுப்பதிலும் சில சமயம் பிரச்சினைகள் ஏற்படலாம். இது எல்லோருக்கும் நடக்கக்கூடியதல்ல. என்றாலும் மருத்துவர்களின் ஆலோசனையோடு பிரச்சினையை விரைவாக சீர்செய்து கொள்ளலாம். 

ஆகவே சுகப் பிரசவமா அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவமா சிறந்தது? எது தமக்கு உகந்தது? என்பவற்றைக் கர்ப்பிணிப் பெண்களே மகப்பேறு மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணரின் ஆலோசனையோடு தீர்மானித்துக் கொள்ளலாம்.அதுவே சிறந்த வழிமுறையாகும்.

 

 

Sat, 07/27/2019 - 08:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை