ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் அமரசேன எம்.பி தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவரின் உரையின் போது அநுர குமார திசாநாயக்க எம்.பி குறுக்கீடு செய்து கேள்வி எழுப்பியதால் இருவருக்குமிடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அநுர குமார எம்.பி, குற்றவியல் பிரேரணை கொண்டுவர எத்தனை எம்.பிக்கள் கையொப்பமிட வேண்டும் என்று தெரியுமா? யாப்பில் என்ன உள்ளது? என வினவினார். இதற்குப் பதிலளித்த துசார இந்துனில் எம்.பி, நாம் புதிதாக தெரிவான எம்.பிக்கள் தான். அதற்காக உங்களுக்குத் தான் அனைத்தும் தெரியும் என்று நினைக்காதீர்கள் என்றார். மீண்டும் குறுக்கீடு செய்த அநுர குமார எம்.பி, பாராளுமன்றத்திற்கு புதிதாக வரும் எம்.பிக்களுக்கு நிலையியற் கட்டளையும் அரசியலமைப்பும் வழங்கப்படும். புதிய எம்.பி என்பதால் உங்களை தவறாக கூறவில்லை என்றார்.
தொடர்நது உரையாற்றிய துசார இந்துனில் எம்.பி, நாம் பாராளுமன்றம் முதல் நாளே எம்மை பற்றி குறைவாகத்தான் நீங்கள் பேசினீர்கள், இந்த ஜனாதிபதியை தெரிவு செய்ய பங்களித்த கட்சி என்ற வகையில் இந்தத் தாக்குதல் தொடர்பில் ஜே.வி.பிக்கும் பொறுப்பு இருக்கிறது.
பொறுப்பற்ற ஜனாதிபதியை தெரிவு செய்ய அவர்களும் ஆதரித்தார்கள். அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவந்தால் நாம் ஆதரிப்போம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
from tkn