தமிழர்களின் உரிமையை முன்னெடுப்பவருக்கே ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு ஆதரவு

பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்

தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பவருக்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினரின் நிதியுதவியில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையிலுள்ள குடும்பங்களின் வீடுகளை திருத்தியமைப்பதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தெரிவு செய்யப்பட்டு வீடுகளை திருத்தியமைத்த 204 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ரீ.கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் பலதரப்பட்ட இன்னல்களை எதிர்நோக்கி இருந்தாலும் அந்த சவால்களை முறியடித்து இன்று இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தங்களது செயற்பாடுகளை தாங்களாக செய்யக் கூடிய அந்த ஆளுமையை பெற்றிருக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது உரிமை சார்ந்த போராட்டத்தை முன்னெடுக்கும் அதேநேரம், அபிவிருத்தி சார்ந்த பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் நாங்கள் நாவிதன்வெளி பிரதேசத்தில் இருக்கின்ற குறை வீடுகளை திருத்துவதற்காக முதற்கட்டமாக 40 ஆயிரம் ரூபா நிதியை இந்த இடத்தில் வழங்கி இருக்கின்றோம்.

இதனை சிறப்பாக செய்த பிரதேச செயலாளரை பாராட்டுகின்றேன். அதேபோல் இங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களை பாராட்டுகின்றேன்.

இதற்காக இப்பிரதேச மக்கள் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளீர்கள் அதற்காக உங்களையும் பாராட்டுகின்றேன் என தெரிவித்தார்.

(சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை