வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

புலிகளுக்கு ஆதரவாக பேசிய தேசத்துரோக வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதற்காக தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்தாண்டு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  

வைகோ மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளியென நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10,000ரூபா அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  

இதையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார். இதையடுத்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க தரப்பில் ம.தி.மு.கவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.   மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வழக்கின் தண்டிக்கப்பட்டவர் தண்டனைக் காலம் முடிந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, இவ்வழக்கில் வைகோவுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Sat, 07/06/2019 - 08:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை