ஜனாதிபதியின் உத்தரவு கிடைத்ததும் தண்டனையை நிறைவேற்ற தயார்

மணல் மூடை பரீட்சிப்பு; அலுகோசும் தயார் சிறைச்சாலை நிர்வாக ஆணையாளர் அறிவிப்பு

ஜனாதிபதியின் உத்தரவு கிடைத்ததும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தயார் நிலையில் வைத்திருப்பதாக அதன் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார். 

நான்கு மரண தண்டனைக் கைதிகளின் பெயர்களும் அவர்களை தூக்கிலிடுவதற்கான நாட்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளபோதும் அது தொடர்பான எவ்வித தகவல்களும் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கோ ஆணையாளர் நாயகத்துக்கோ கிடைக்கவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இரண்டு அலுகோசுகள் நிரந்தரமாக சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய நாட்கள் பற்றிய விவரம் எமக்கு கிடைத்ததும் அதற்கு முந்தைய நாளன்று தூக்குக் கயிற்றின் வலிமை மற்றும் அதன் தற்போதைய நிலைகுறித்து ஆராய்வதற்காகத் தூக்குக் கயிற்றில் மணல் மூடையைக் கட்டித் தொங்கவிட்டு பரிசோதிப்பது வழக்கம். அந்த வகையில் பரிசோதிப்பதற்காக மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார். 

மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளித்துள்ளது. அவர்களுள் முதலில் தூக்கிடுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட நால்வரின் பெயர்களைத் தெரிவு செய்து அதற்கான நாள் குறிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளபோதும் அதுபற்றிய எவ்வித தகவல்களும் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குக் கிடைக்காததால் அந்நால்வரும் யாரென்பது பற்றி இதுவரை தங்களுக்குத் தெரியாதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி அறிவித்துள்ளபோதும் அதற்கு எதிராக 12அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 07/03/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை