(மட்டக்களப்பு சுழற்சி,கல்லடி குறூப்,திருகோணமலை குறூப்,வெல்லவெளி தினகரன் நிருபர்கள்)
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணிக்கும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலை அணிக்கு மிடையில்முதல் முறையாக நடைபெற்ற 50 ஓவர் கொண்ட சிநேக பூர்வமான கடினபந்து கிரிக்கெட் சமரில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலை அணி முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 40 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது .பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைஅணி ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு 30 ஓவர் களில் 103ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டுகளால் இவ்வாண்டுக்கான ஜோய்ஸ் மிக் கிரிக்கெட் சமர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
இப்போட்டி நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசேப் பொன்னையா ஆகியோர் சிறப்பு அதிதியாகக்கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணியின் எம்.பிரந்தாவணன் தெரிவானார் 3 விக்கட்டுகளை இவர் வீழ்த்தியதுடன் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தார் .சிறந்த களத்தடுப்பு வீரராக திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி தேசிய பாடசாலைஅணியின் என்.எஸ்.ஜதுர்சன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாட சாலைஅணி எஸ்.துஜிதரன் ,சிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அணி ஏ.பிரலாளன் ஆகியோரும் தெரிவாகினர்.
இதன் பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ, கே.மன்சூர், ஹட்ச் வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா பொது முகாமையாளர் மனோஜ், மோசஸ் மாவட்ட விளையாட்டு அதிகாரி வீ.ஈஸ்பரன், கோட்டமுனை விளையாட்டு கிராம தலைவர் இ.சிவநாதன் யேசு சபை உதவி மேலாளர் அருட்சகோதரர் போல் சற்குணநாயகம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.
from tkn