தொலைக்காட்சி, வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்

வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக மங்கள அறிவிப்பு

தனக்கு எதிராக தினியாவல பாலித்த தேரர் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து கண்டறியாது அதனை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வலைதளங்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் தினியாவல பாலித்த தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலுள்ள அரசியல்வாதி யார் என்பது தொடர்பில் தான் விரைவில் அம்பலப்படுத்துவேன் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

"இதுபோன்று யாருக்கு வேண்டும் என்றாலும் எதைப் பற்றியும் வெட்டிப் பேச்சு பேசி திரியலாம். ஆனால் அதன் உண்மையை தெரிந்து அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. நான் இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரல்ல. என்றாலும் நான் இந்த ஊடக நிறுவனங்களுக்கு விளம்பரம் வழங்குவதை நிறுத்தியதையடுத்தே அவர்கள் எனக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புச் செய்ய ஆரம்பித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் குறிப்பாக இரண்டு ஊடக நிறுவனங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் வைராக்கியமான செய்திகளை வெளியிட்டு வந்தனர். இதனால் தான் அந்நிறுவனங்களுக்கு விளம்பரங்களை வழங்க வேண்டாமென நான் எனது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கு அறிவித்தேன்," என்றும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.

தினியாவல பாளித தேரரின் ஆசிர்வாதத்தால் தனக்கு கோடீஸ்வரராகும் சந்தர்ப்பம் கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணம் முடிந்து நாடு திரும்பியதும் அதற்கு அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் என்றும் கூறினார்.

இதேவேளை அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ் பணியாற்றிய முக்கிய உத்தியோகத்தரான துஷித்த ஹல்ஒழுவ தனக்கு இழைத்துள்ள துரோகம் தொடர்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

Sat, 07/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை