கல்முனை நிர்வாக பிரச்சினைகளுக்கு சமகாலத்தில் தீர்வு: உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளால் எதையும் சாதிக்க முடியாது

கல்முனை நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எத்தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளதாகவும் ஆகஸ்ட் 05 க்கு முன்னர்,நல்லதொரு முடிவை பிரதமர் அறிவிப் பாரெனத் தான், நம்புவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பில், சாய்ந்தமருது சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று (24) ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

கல்முனையை நான்காக பிரித்து சாய்ந்தமருதுக்கு சபை வழங்கும் தீர்மானமும் உள்ள நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தற்போது பூதாகரமாகியுள்ளது.

இப்பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருமாற்றம் பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இப்பிரச்சினையில் அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சாதகமாகப் பயன்படுத்தி, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளரை நியமிப்பதற்கான முஸ்தீபுகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசித்தான் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். கல்முனை விடயத்தில் தமிழ்த்தரப்பு எவ்வளவு தூரம் விட்டுக்கொடுப்பு செய்யும் என்பதுதான் இதிலுள்ள பிரச்சினை.

முஸ்லிம் தரப்பில் விட்டுக்கொடுப்பு செய்தாலும் அதற்கும் சில எல்லைகள் இருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் எந்தத் தரப்புக்கும் பாதிப்பில்லாமல் தீர்வை பெற்றுத்தர வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரதமருக்கு இருக்கின்றது.

முன்னைய ஆட்சியின்போதே கல்முனை பிரச்சினையை தீர்த்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால், கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இணக்கப்பாடின்றி சர்வாதிகார ரீதியில் இதற்கு தீர்வுகாண முடியாது. இந்த சூழ்நிலையில் எங்களை கைவிட்டு விடவேண்டாமென மருதமுனை மக்களும் நற்பிட்டிமுனை மக்களும் இப்போது கூறத் தொடங்கியுள்ளனர்.

ஏக காலத்திலேயே இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகாணப்பட வேண்டும்.தீர்வுகள் புத்திசாதுரியத்தால் சாதிக்கப்பட வேண்டும். மக்களை உணர்ச்சிவசப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.

கல்முனையை ஏககாலத்தில் நான்காகப் பிரித்து, எல்லாப் பிரச்சினைகளுக்குத் தீர்வுவரும் நேரத்தில் சாய்ந்தமருதுக்கும் தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் என்றார்.

 

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை