ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக ரஷீத் கான் நியமனம்

இளம் சுழல் நட்சத்திரமான ரஷீத் கான் அனைத்து வகைப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான அஸ்கர் ஆப்கான் அந்த அணியின் உபதலைவராக இனிவரும் காலங்களில் செயற்படவுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கை மூலம் தமது அணியில் புதிய தலைவர், உபதலைவர் பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்திருந்தது.

ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் மூன்று வகைப் போட்டிகளிலும் மூன்று வெவ்வேறு தலைவர்களை நியமனம் செய்திருந்தது. அதன்படி, முன்னர் உலகக் கிண்ணம் அடங்கலாக ஒருநாள் போட்டிகளில் குல்படின் நயீப், டி20 போட்டிகளில் ரஷீத் கானும், டெஸ்ட் போட்டிகளில் றஹ்மத் ஷாஹ்வும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர்களாக நியமனம் பெற்றிருந்தனர்.

எனினும், கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடர்ச்சியான தோல்விகளால் மீண்டும் அணித்தலைவர் பொறுப்புக்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட சகலதுறை வீரரான குல்படின் நயீப் பந்துவீச்சில் ஓவருக்கு 6.39 ஓட்டங்கள் என்ற ரீதியில் வழங்கியிருந்ததோடு, 21.5 ஓட்டங்கள் என்ற துடுப்பாட்ட சராசரியையும் காட்டியிருந்தார். இப்படியான மோசமான பதிவுகள் குல்படின் நயீப்பின் அணித்தலைவர் பதவியை இழக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ள ரஷீத் கான் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி மூலம் தனது தலைமைத்துவ பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கின்றார்.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை