துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது மனைவி தலைமறைவான விரக்தியில், அது குறித்து கவிதைகளை எழுதி வருகிறார்.
துபாயிலுள்ள தனது கணவரை விட்டுச் சென்ற இளவரசி ஹயா பின்த் அல் ஹுசைன் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது,
குதிரை பந்தய திடலின் உரிமையாளரும், பெரும் செல்வந்தருமான 69 வயதான ஷேக் முகமது, பெயர் குறிப்பிடாத பெண்ணொருவர் “தேச துரோசம் இழைத்து விட்டதாகவும், காட்டிக் கொடுத்துவிட்டதாகவும்” குற்றஞ்சாட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விரக்தியுடன் சமூகதளத்தில் தொடர்ந்து கவிதைகளை பதிவிட்டு வருகிறார்.
அண்மையில் அவர் எழுதிய கவிதைக்கு, “நீ வாழ்ந்தாய், இறந்தாய்” என தலைப்பிட்டு குறிப்பிட்டிருப்பதாவது:
நீ நம்பிக்கை துரோகி, விலைமதிப்பற்ற என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டாய். உனது விளையாட்டு வெளியே தெரிந்துவிட்டது. நீ பொய் கூறிய நாட்கள் முடிந்து விட்டன. இனி உனக்கு என் இதயத்தில் இடமில்லை. நாம் யாராக இருந்தோம்? நீ யாராக இருந்தாய் என்பது முக்கியமல்ல. இனி உன்னை பற்றிய கவலை இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கவிதையில், “அன்பே, இன்னும் அதிகம் சொல்ல ஏதுமில்லை. உன் மரண அமைதி என்னைத் துன்புறுத்துகிறது’’ என்றும் மற்றொரு கவிதையில், “இனி உனக்கு என்னிதயத்தில் இடமில்லை’’ என்றும் “நீ வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்கு கவலை இல்லை’’ என்று மற்றொரு கவிதையிலும் குறிப்பிட்டுள்ளார். மன்னரின் கவிதைகள் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து வருகின்றன.
ஜோர்தானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, ஷேக் முகமதை 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரது ஆறாவதும் இளைய மனைவியுமாக மாறினார்.
வேறுபட்ட மனைவிகளிடம் இருந்து ஷேக் முகமது 23 குழந்தைகளை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இளவரசி ஹயா ஜெர்மனியில் தஞ்சம் கோரி கணவரை விட்டு பிரிந்து சென்றார்.
லண்டனின் மத்திய பகுதியிலுள்ள கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸிலுள்ள 85 மில்லியன் யூரோ மதிப்புள்ள வீட்டில் இளவரசி ஹயா இப்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
from tkn