தினேஸ் சந்திமால் ஆனந்தா கல்லூரியில் தெரிவான 9வது வீரர்

கொழும்பு ஆனந்தாக் கல்லூரி பல உயர் மட்ட கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது. இவர்களில் சிலர் இலங்கை தேசிய அணியில் விளையாடி புகழ்பெற்றவர்கள். ஆனந்தாக் கல்லூரி இவ்வாறு உருவாக்கிய கிரிக்கெட் பிரபலங்களில் முன்னிற்பவர் இலங்கைக்காக உலக கிண்ணத்தை வென்றுகொடுத்த அர்ஜுன ரணதுங்க ஆவார்.

ஒப்சேர்வர்- சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இதுவரை வென்றுள்ள 40 பேரில் 9 பேர் ஆனந்தாக் கல்லூரியை சேர்ந்தவர்கள். அவ்வாறு 2009 இல் அந்த விருதை வென்ற ஆனந்தாக் கல்லூரி வீரர் தினேஷ் சந்திமால்.

அர்ஜுன ரணதுங்க, தினேஷ் சந்திமால் தவிர மார்வன் அத்தபத்து (1990) சஞ்சீவ ரணதுங்க (1988) திலான் சமரவீர (1994 மற்றும் 1995) முத்து முதலிகே புஷ்பகுமார (1999) ஆகியோரே ஒப்சேர்வர் விருதை வென்ற ஏனைய ஆனந்தாக் கல்லூரி வீரர்களாவர். இதில் அர்ஜுன ரணதுங்கவும், திலான் சமரவீரவும் ஒப்சேர்வர் விருதை தலா இரண்டு தடவைகள் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் சந்திமால் ஒப்சேர்வர் – மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றார்.

இப்போது 29 வயதாகும் தினேஷ் சந்திமால் இதுவரை 53 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தம் 3768 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் அவரது சராசரி 41.86 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் அவர் 11 சதங்களையும் 17 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார். இதில் ஒரு போட்டியில் அவர் பெற்ற ஆகக்கூடிய ஒட்ட எண்ணிக்கை 164 ஆகும்.

அதேநேரம் 146 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சந்திமால் 32.42 என்ற சராசரியில் மொத்தம் 3599 ஒட்டங்களை பெற்றுள்ளார். இதில் 4 சதங்களும் 22 அரைச்சதங்களும் அடங்குகின்றன. இதில் ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கை 111 ஆகும்.

ஒவ்சேர்வர் மொபிடெல் – சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்ற சில மாதங்களிலேயே சந்திமால் இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது எனினும் அவரது முதல் போட்டியில் அவர் நீண்டநேரம் நிலைத்திருந்து ஆட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அவரது முதலாவது ஒரு நாள் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. சிம்பாப்பேக்கு எதிரான அந்த போட்டி 2010 ஜூன் முதலாம் திகதி புலாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

இலங்கைக்காக ஆடத்தொடங்கியது முதல் அவரது துடுப்பாட்டம் மெருகு பெற்றது. எவ்வாறெனினும் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கிண்ண கோப்பை கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான இலங்கை அணியில் துரதிஷ்டவசமாக சந்திமால் இடம்பிடிக்கத் தவறியமை அவரது கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்க முடியாத சம்பவமாக இடம்பெற்றுவிட்டது. இது தொடர்பாக கிரிக்கெட் விற்பன்னர்கள் மற்றும் அபிமானிகள் பலத்த விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் தெரிவுக்குழு சந்திமாலை அணியில் சேர்க்காததற்கு அவரது அண்மைக்கால போட்டிகளில் திறமை காட்டாததே காரணம் என்று கூறி தப்பிவிட்டனர்.

2018 முதல் மூன்று வகை (டெஸ்ட், ஒரு நாள், டி20) கிரிக்கெட் போட்டிகளிலும் (27 போட்டிகள்) அவரது மொத்த ஓட்டங்கள் 31.96 என்ற சராசரியாக 863 ஆக மட்டுமே இருந்தது. அதில் ஒரு சதமும் மூன்று அரைச்சதங்களும் அடங்கியிருந்தன. ஆனால் 2016 வரை அவர் 108 இன்னிங்ஸ்களில் மொத்தம் 3033 ஒட்டங்களை பெற்றிருந்தார்.

அவரது நான்கு ஒரு நாள் சதங்களும் 22 அரைச்சதங்களில் 20 அரைச்சதங்களும் அந்த காலகட்டத்திலேயே வந்தன. ஆனால் 2017க்குப் பின்னர் சந்திமாலின் அதிர்ஷ்டம் தொடர்ந்து அவருடன் நிலைத்திருக்கவில்லை. அதன் காரணமாகவே உலக கிண்ணம் உள்ளிட்ட பல போட்டிகளில் அவர் தெரிவு செய்யப்பட்டமைக்கு காரணமாகியது. அந்த காலகட்டத்தில் அவர் 24.6 என்ற சராசரியுடன் 24 இன்னிங்ஸ்களில் 566 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

உலக கிண்ண சுற்றுப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற தென் ஆபிரிக்க சுற்றுலாவிலும் சந்திமால் இடம் பிடிக்கத் தவறினார்.

எனினும் உலக கிண்ணப் போட்டிகளின் பின்னர் சந்திமால் நிச்சயம் கோட்டைவிட்ட இடத்தை பிடிப்பார் என்று நம்பப்படுகிறது.

ஒப்சேர்வர் – மொபிடெல்- சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்ற பின் எதிர்கால இலங்கை அணியில் எனக்கு இடம் கிடைக்குமென்று நான் நினைத்தேன். அதேபோல் நடந்தது என்று சந்திமால் தனது பழைய ஞாபகங்களை மீட்டினார்.

ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை வீரர் விருதை வெல்லவேண்டும் என்பது அனைத்து பாடசாலை கிரிக்கெட் வீரர்களினதும் இலட்சியமாக இருந்தது. அந்த பிரபல விருது இலங்கைக்காக விளையாடும் அவர்களது கனவை நனவாக்கும் ஒரு பாலமாக அவர்கள் கருதினார்கள். உண்மையில் நடந்ததும் அதுதான். குறிப்பிட்ட விருதை வென்ற பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் அடுத்த சில மாதங்களிலேயே இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.

Sat, 07/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை