பங்களாதேஷில் உள்ள ரொஹிங்கிய அகதிகளின் முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் மோசமான வானிலை காரணமாக அழிந்துபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
கொக்ஸ் பசார் முகாம்களில், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 58.5 சென்டி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
முகாம்களில் உள்ள கூடாரங்கள் மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதால் மண்சரிவுகள் ஏற்படும் போது அவை அதிகமாக பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். அதனால் தற்போது 6000க்கும் மேற்பட்ட அகதிகள் தங்குமிடங்கள் இன்றி தவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மின்மாரின் ரகைன் மாநிலத்தில் இராணுவ நடவடிக்கை ஒன்று காரணமாக கடந்த 2017 ஓகஸ்டில் சுமார் 740,000 ரொஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர். ஏற்கனவே சுமார் 200,000 ரொஹிங்கியர்கள் தஞ்சமடைந்திருக்கும் முகாம்களில் இவர்களும் அடைக்கலம் பெற்றனர்.
from tkn