பாகிஸ்தான் இராணுவ விமானம் வீடுகளில் விழுந்து 18 பேர் பலி

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகருக்கு அருகில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து விமானப் பணியாளர்கள் மற்றும் 13 பொதுமக்கள் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி இருப்பதோடு இதனால் பல வீடுகளும் தீப்பற்றி எரிந்துள்ளன. விமானம் விழுவதற்கு முன்னரே தீப்பற்றி எரிந்ததாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிங் ஏர் 350 என்ற விமானம் தரையிறங்கும் விமான நிலையத்திற்கு அருகில் விழுவதற்கு முன்னர் செங்குத்தாக திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டியில் இராணுவத் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெளிவாக தெரியவில்லை.

விபத்து பகுதியில் பொது மக்கள் சூழ்ந்துவிட்டனர். அதில் சிலர் அழுது கொண்டிருக்கின்றனர் என ஏ.எப்.பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வீடுகளில் கரும்புகை படிந்துள்ளதையும், சில வீடுகள் இடிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஏ.எப்.பியின் செய்தியாளர், அந்த பகுதியில் உள்ள இடிபாடுகளில் இருந்து புகை இன்னும் வந்துக் கொண்டிருப்பதாகவும், வீட்டின் கூரை ஒன்றின் மீது விமானத்தின் பகுதி ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு தனியார் விமான சேவை நிறுவனமான ஏர்ப்ளுவின் விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 150 பேர் உயிரிழந்தனர் அதுவே பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மோசமான விமான விபத்தாகும்.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை