14 ஆண்டுகளின் பின் மெஸ்ஸிக்கு ‘சிவப்பு அட்டை’

கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரில் சிலி அணியை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜன்டீன அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

எனினும், பிரேசிலின் சாவோ போலோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீன நட்சத்திரம் லியோனர் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்வில் இரண்டாவது முறை சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்க சம்பியனான ஆர்ஜன்டீன அணி செர்கியோ அகுவேரா மற்றும் போல் டெய்பாலா பெற்ற கோல்கள் மூலம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

எனினும் போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவுறுவதற்கு சற்று முன்னர் சிலி பின்கள வீரர் கரி மெடெலுடன் மோதிய மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது போட்டியின் முக்கிய அம்சமாக மாறியது.

பந்தை பெறுவதில் மெஸ்ஸி மற்றும் மெடல் இருவரும் கடுமையாக போராடி நிலையிலேயே இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இருவரும் நெஞ்சால் ஒருவரை ஒருவர் தள்ளிவிட அதில் தலையிட்ட நடுவர் உடனடியாக இருவருக்கும் சிவப்பு அட்டை காண்பித்தார்.

இந்த வெளியேற்றமானது பார்சிலோன முன்கள வீரரான மெஸ்ஸி 2005ஆம் ஆண்டு தேசிய அணியுடனான தனது முதல் போட்டிக்கு பின்னர் கழக மற்றும் தேசிய அணியில் சிவப்பு அட்டை பெறுவது முதல் முறையாக இருந்தது. ஹங்கேரியுடனான தனது கன்னிப் போட்டியில் வைத்தே இதற்கு முன்னர் அவர் நேரடியாக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

மெஸ்ஸி வெளியேற்றப்பட்ட நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் சிலி பெனால்டி மூலம் கோல் ஒன்றை பெற்றது. அர்டுரோ விடல் அதனை கோலாக மாற்றினார்.

ஆர்ஜன்டீனா கடந்த 26 ஆண்டுகளில் எந்த கிண்ணமும் வெல்லாமல் உள்ள நிலையில் இம்முறை கோப்பா அமெரிக்க கிண்ணத்தை ஆறுதல் வெற்றி ஒன்றுடன் முடித்துக் கொண்டது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை