நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு ஊர்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காத்மண்டு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி நிதின் நேபாளத்தில் மொத்தம் உள்ள 77 மாவட்டங்களில் 64 மாவட்டங்கள் கனமழையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்றார். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்ததாகவும், 67 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 40 பேரை காணவில்லை என்று அவர், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் இராணுவம் உட்பட அனைத்து அனர்த்த மீட்பு துறைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
from tkn