'பற்றிகலோ கம்பஸை' அரசு சுவீகரிக்க வேண்டும்

பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் அரசுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது

துறைசார் மேற்பார்வைக்குழு அரசுக்கு பரிந்துரை

பற்றிகலோ கம்பஸ் நிறுவனத்துக்கு நிதி கிடைக்கப்பெற்றமை, கட்டடம் அமைக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகள் சட்டரீதியற்றவை என்பதால் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி உடனடியாக இதனை சுவீகரிக்க வேண்டுமென அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு நேற்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க இந்த அறிக்கையை சமர்ப்பித்தார்.

‘பற்றிகலோ கம்பஸ்’ நிறுவனத்துக்கு கிடைத்துள்ள மொத்த நிதி சட்டவிரோதமாக இருப்பதாகவும், அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட காணிக்கு மேலதிகமாக சட்டவிரோத நிர்மாணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்றும் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2013-.08.-15 ஆம் திகதி ஹிரா பவுண்டேஷன் நிறுவனத்துக்கும் அப்போதைய இளைஞர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அமைச்சுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஹிரா பவுண்டேஷன் சார்பில் அப்போது பிரதியமைச்சராகவிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். பாராளுமன்றத்தை

பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. ஆரம்பத்திலேயே தவறு இழைக்கப்பட்டுள்ளது.

2016-.07.-17ஆம் திகதியே ஹிரா பவுண்டேஷன் என்ற பெயரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுகிறது. இருந்த போதும் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03ஆம் திகதி திகதியிடப்படாத கடிதமொன்று உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுகிறது. அதில் இந் நிறுவனத்தை உயர்கல்வி நிறுவனமாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத நிறுவனமொன்றுக்கு எவ்வாறு உயர்கல்வி அந்தஸ்து கோரமுடியும்? என்ற கேள்வி எழுகிறது.

ஆரம்பத்தில் ‘பற்றிகலோ கம்பஸ்’கொலேஜ் பிறைவேட் லிமிடட்’ என்ற பெயரிலேயே நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது ‘பற்றிகலோ கம்பஸ் பிறைவட் லிமிடட்’ எனப் பெயர்மாற்றப்பட்டது. இவ்வாறு பெயர் மாற்றப்பட்ட பின்னர் பழைய பெயரிலுள்ள இலங்கை வங்கியின் கணக்கிற்கு 3.6 பில்லியன் ரூபா வைப்பிலிடப்படுகிறது. பற்றிகலோ கம்பஸ் கொலேஜ் என்ற பெயரில் இல்லாத வங்கிக் கணக்கிற்கு எவ்வாறு பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவர முடியும். இது வெளிநாட்டு நிதிச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதால் இது விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தப் பணம் தொடர்பில் விசாரித்தபோது ஹிரா பவுண்டேஷனின் தற்போதைய தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா கூறியது, வெளிநாட்டிலிருந்து நன்கொடையாகக் கிடைத்தது என்பதாகும். எனினும், நாம் ‘பற்றி கம்பஸுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஹிஸ்புல்லா கூறியது, கடனாகப் பெற்ற பணம் என்றாகும். ஐவரிடமிருந்து கடன் பெற்றதாக ஒப்பந்தங்களை காண்பித்துள்ளபோதும் ஒரேயொரு நபரிடமிருந்தே வங்கிக்கு பெருந்தொகை பணம் இடப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய வங்கி மற்றும் இலங்கை வங்கியின் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளோம். அந்நியசெலாவணி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படவில்லையென்பது தெளிவாகிறது.

இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு அசேலபுர பிரதேசத்தில் 35 ஏக்கர் பரப்பளவுடைய காணி மகாவலி அதிகார சபையினால் 30 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிரவும் 8 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் சட்டபூர்வமற்ற நிர்மாணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு வாகரை பிரதேச செயலாளரிடம் அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் காணிகளில் சட்டவிரோத கட்டடம் அமைத்தமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முதலீட்டுச்சபை மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு முன்வைக்கப்பட்ட தகவல்களில் ‘ஷரிஆ மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான இளம் கலைமாணி’ பட்டத்துக்கே அனுமதி கோரியுள்ளனர். ஷரிஆ சட்டம் அல்லது இஸ்லாம் மதம் சார்ந்த உலமாக்களை உருவாக்குவது இதன் பிரதான நோக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் அரேபிய கட்டடக்கலைகளை பெரிதும் கொண்டிருப்பதால் அரபு மயப்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகமும் உள்ளது.

இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தி இந் நிறுவனத்தை அரசாங்கம் உடனடியாக சுவீகரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக துரித சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஒழுங்கு விதிகளுக்கமைய பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு 6 வாரங்களுக்குள் அமைச்சரவையின் அவதானிப்புக்கள் பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஐ.தே.க எம்.பி விஜயபால ஹெட்டியாராச்சி, எதிர்க்கட்சி எம்.பி சிசிர ஜயக்கொடி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை