இடைநிறுத்தப்பட்டுள்ள வீடுகளை நிர்மாணிக்குமாறு மக்கள் கோரிக்கை

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டம்

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டம் பெல்மோரல் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூன்று இலட்சம் ரூபா கடன் அடிப்படையில் 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 25 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியாது அம்மக்கள் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தோட்டத்தில் தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்த மக்களின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஷ்ணனின் ஏற்பாட்டில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கடன் அடிப்படையில் 25 வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் பகுதி பகுதியாக உரிமையாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டது. மேலும் வீட்டுத்திட்டத்தை கட்டம் கட்டமாக கட்டுவதற்கு பண ஒதுக்கீடு வழங்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இந்நிலையிலேயே இவர்கள் வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர்.

தற்போது உள்ள கட்டடபொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த வீடுகளை உரிய காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக வீட்டுரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த நிதி பலருக்கு கிடைக்கவில்லை என இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த பிரதேசத்தில் வீடுகள் அமைப்பதற்கான நீர் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததன் காரணமாகவும் நாளாந்தம் கட்டிடப் பொருட்கள் விலையேற்றம் காரணமாகவும் அதிகமான வீடுகள் நிறைவு செய்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்த வீடுகளுக்கு செலவு செய்த நிதியினால் பயன்பெற முடியாத நிலை உள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று இலட்சம் ரூபா செலவில் இந்த வீடுகளை நிர்மாணிப்பது மிகவும் சிரமமான காரியம் எனவும் தங்களுக்கு கிடைக்கின்ற குறைந்த சம்பளத்தில் மேலதிக பணத்தினை செலவழித்து இந்த வீடுகளை கட்ட முடியாது என்றும், குறித்த பணத்தை கொண்டே தங்களுடைய அடிப்படைத் தேவைகளையும் தங்களது பிள்ளைகளின் கல்வியையும் செய்துகொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதுகுறித்து உரிய அதிகாரிகள் கவனமெடுத்து தங்களுக்கு தங்களின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கோ அல்லது எஞ்சிய பகுதியை நிர்மாணிப்பதற்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை