அபிவிருத்தியின் பெயரில், உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெறுகின்றன. அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். ஆனால் உரிமைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாரில்லை. எங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றார்.
திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை (27) மாலை நடைபெற்ற நீண்ட காலம் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றிய 1119பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
ஒரு காலத்தில் அவர்கள் வடக்கு கிழக்கில் பாரிய சேவையை ஆற்றினார்கள்.
விசேடமாக யுத்தத்தின் காரணமாக மக்கள், ஆசிரியர்கள் , பாடசாலைகள் என அனைத்தும் குடிபெயர்ந்து பல்வேறு சிரமங்களை அனுபவித்தபோது தங்களது கடமைகளை செய்தவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.
நாங்கள் எல்லோரும் உங்களுக்கு இந்த நியமனம் கிடைப்பதையிட்டு சந்தோசமடைகின்றோம். அதே போன்று நீங்களும் ஆக்கபூர்வமாகக் கடமையாற்றக் கூடிய நிலைமையை அடைய வேண்டும். அடையவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் அதில் ஏதும் குறைகள் இருக்குமாக இருந்தால், அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உங்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தகைமையை நீங்கள் முழுமையாகப் பெறவேண்டும்.
இன்று வடக்கு கிழக்கில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுகின்றன. அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். ஆனால் அபிவிருத்தியின் பெயரில், உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் அபிவிருத்திகள் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்றார்.
ரொட்டவெவ குறூப் நிருபர்
from tkn