பயங்கரவாதிகளின் சடலங்கள் அம்பாறையில் தோண்டியெடுப்பு

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் நேற்று (7) தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்க ஹெட்டிவத்த முன்னிலையில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டதில் தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபர்களின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நான்கு உடற் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சடலத்தின் உடற்பாகங்கள் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவின் முன்னிலையில் இந்த உடற்பாகங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வொலிவேரியன் 'சுனாமி கிராமத்தில்' உள்ள வீடொன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர். இவ் வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும் 6 ஆண்களினதும் 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.

பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் தந்தை அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்கள் கடந்த மாதம் 2 ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில் இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது

அம்பாறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மரபணு பரிசோதனைகளுக்காக சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக அம்பாறை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு குறூப் நிருபர்

 

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை