கோரிக்கை நியாயமானது, கால அவகாசம் தேவை
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை வதைக்கும் வகையில் ரயில் ஊழியர்கள் செயல்படுவார்களானால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொதுமக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் இத்தகைய போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வெளிநாட்டில் இருந்தாவது சாரதிகளை கொண்டு வந்து ரயில் சேவையை நடத்துவதற்கு தாம் பின்நிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான ஒரு முறைமையை ஏற்படுத்திக் கொள்ளவே கால அவகாசம் கோரியுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முற்பட்ட இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பொறுப்பேற்று போக்குவரத்து அமைச்சு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள நிலையில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் போராட்டங்களை மேற்கொள்வது அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;
ரயில்வே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் நிலையில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 720 அரசு ஊழியர்களின் சம்பளங்களிலும் முரண்பாடு ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அரசாங்கம் பெரும் நெருக்கடி ஒன்றை எதிர்கொள்ள நேரிடும் அதனைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். அதனூடாக ஆராயப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அதற்கான முறைமை ஒன்றை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.
கடந்த வாரம் எந்த அறிவித்தலும் இன்றி ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்தது அதேபோன்று இவ்வார த்திலும் வாரத்தின் இறுதி நாளில் மக்கள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தயாராகும் நிலையில் மக்களை பாதிக்கும் விதத்தில் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது பெரும் அநீதியான செயல்.மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அதனால் ஓய்வு பெற்றுள்ள ரயில்வே ஊழியர்களை இணைத்துக்கொண்டு ரயில் சேவையை சுகமாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். நேற்றைய தினமும் சுமார் 70 பேர் நேரில் வந்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இன்றும் சிலர் வர உள்ளனர்.
அத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடாது எந்த பேச்சுவார்த்தைக்கும் நாம் இணங்கப் போவதில்லை. பேச்சுவார்த்தை அவசியமானால் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு வரவேண்டும்.
ரயில்வே ஊழியர்கள் சிலரது சம்பளத்தில் குறைபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் .
எனினும் சிலர் 2 லட்சம் 3 லட்சம் என அதிகரித்த சம்பளம் பெற்று வருகின்றனர் இது தொடர்பில் ஆராய்ந்து முறைமை ஒன்றை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காகவே நாம் கால அவகாசம் கோரியுள்ளோம்.
எமது கோரிக்கைக்கு செவிமடுக்காமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களானால் அதை எம்மால் பார்த்திருக்க முடியாது மக்கள் நலன் கருதி ஓய்வு பெற்றவர்களை நியமித்து இரண்டு வாரத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்
from tkn