ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியவர்கள் யார் என்பது குறித்து ஆராய்வதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவும் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கான கடப்பாடும் தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டது. இதற்கமைய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன், இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் அழைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப் போவதில்லையெனப் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரன் பிரசாத்
from tkn