21 ஆம் திகதி ஆபத்திருப்பதாக 20 ஆம் திகதி மாலை தகவல் கிடைத்தது
ஒன்பது மாதங்கள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தன்னை அழைக்காத நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு கோருவது நியாயமற்றது என பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுதந்தர தெரிவித்தார். ஏப்ரல் 9ஆம் திகதி அரசாங்க புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரினால் அனுப்பப்பட்ட தாக்குதல் குறித்த புலனாய்வு அறிக்கை கிடைத்தவுடன், நான்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களைத் தெரிவுசெய்து அவர்களின் ஊடாக உரிய நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் கூறிப்பிட்டார்.
“ஏப்ரல் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அழைப்பை ஏற்படுத்திய அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாளை ஆபத்தான நிகழ்வொன்று நடைபெறப்போகிறது என எச்சரித்தார். மறுநாள் அதாவது 21ஆம் திகதி மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய அவர் இன்றையதினம் ஆபத்தொன்று நிகழப்போகிறது எனக் கூறியிருந்தார்” என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரும் சாட்சியமளித்தனர். நேற்று முற்பகல் 11 மணிக்கு சாட்சியமளிக்க ஆரம்பித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்திர மாலை 4.30 மணிவரை சாட்சியமளித்தார்.
ஏப்ரல் 9ஆம் திகதியே தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் கட்டமைப்பில் காணப்பட்ட தோல்வி காரணமாக பாரிய அனர்த்தத்தைத் தடுக்க முடியாது போனது என்றும் அவர் தெரிவித்தார்.
தெரிவுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய அவர், கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி தன்னை அழைத்த ஜனாதிபதி, ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், தூதுவர் பதவியொன்று வழங்குவதுடன், விசாரணை ஆணைக்குழுவில் குற்றமற்றவராக்குவதாவும் கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெற்ற புலனாய்வு விடயங்களை ஆராயும் கூட்டத்தின் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து கடிதமொன்று கிடைத்தது. அதில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேதினம், அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளரிடமிருந்து மற்றுமொரு கடிதம் வந்தது. அதில் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தபோதும் தேவாலயங்கள் பற்றியோ இந்திய உயர்ஸ்தானிகராலயம் பற்றியோ எதுவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கவில்லை. அது மாத்திரமன்றி இதில் எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. இந்த கடிதங்கள் கிடைத்ததும், நான்கு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்களைத் தெரிவு செய்து அவர்களுடன் இந்த விபரங்களை அனுப்பிவைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் ஏப்ரல் 18 ஆம் திகதி காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்கவைக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளரிடமிருந்து அறிக்கையொன்று அனுப்பப்பட்டிருந்ததாகவும், அதில் ஏப்ரல் 9ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதன் பின்னர் 19ஆம் திகதியும் மற்றுமொரு அறிக்கை வந்தது அதிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், 20ஆம் திகதி அறிக்கையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் சஹ்ரான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இறுதியில் சஹ்ரான் உள்ளிட்ட வலையமைப்புத் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9ஆம் திகதி இவ்வாறான தாக்குதல்கள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை அதனைத் தடுப்பதற்கு நாம் எவ்வாறான திட்டங்களை வகுத்திருந்தோம்.
பொலிஸார் மாத்திரம் தனித்து நின்று எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதற்கு பாதுகாப்புத் தரப்பில் உள்ள சகலருக்கும் கூட்டுப்பொறுப்புள்ளது.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு தன்னை அழைக்க வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளருக்கு ஜனாதிபதி கூறியிருப்பதாகவும், ஒன்பது மாதங்களாக தான் பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லையென்றும் கூறினார்.
மகேஸ்வரன் பிரசாத், லோன்ஸ் செல்வநாயகம்
from tkn