யாழ்ப்பாணம், முடமாவடிப் பகுதியில் வாகனமொன்றில்; வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூவரை விசேட அதிரடிப்படையினர் இன்று (15) காலை கைதுசெய்துள்ளதோடு, சுமார் ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான 450மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றுக்கு முன்பாக வைத்து இச்சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொசன் உற்சவத்தை முன்னிட்டு, இன்றையதினமும் (15) நாளையதினமும் (16) மதுபானசாலைகளை மூடுவதற்கான உத்தரவை மதுவரித் திணைக்களம் நேற்று (14) விடுத்திருந்தது.
இந்நிலையில், குறித்த பகுதியில் வாகனமொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் சந்தேக நபர்கள் மதுபானம் விற்பனை செய்துள்ளனர்.
குறித்த வாகனத்திலிருந்து சுமார் ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான கால் போத்தல் அளவுடைய 450மதுபானப் போத்தல்களை கைப்பற்றியுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
வாகன சாரதியுடன் மற்றும் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, அவர்கள் விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(பருத்தித்துறை விசேட நிருபர் -நிதர்சன் விநோத்)
from tkn