ஊடகத்தை தவிர்த்த இலங்கை அணி அபராதத்திற்கு முகம்கொடுக்க வாய்ப்பு

உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியிடம் 87 ஓட்டங்களில் தோல்வி அடைந்த பின், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துச் சென்ற இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் அபராதத்திற்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி விதிமுறையின்படி, போட்டி முடிந்தபின் வெற்றி பெற்ற அணியும், தோல்வி அடைந்த அணியும் ஊடகங்களைச் சந்தித்து பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த விதிமுறையை மீறிய இலங்கை அணி, சனிக்கிழமை போட்டி முடிந்தபின் அனைத்து வீரர்களும் ஊடகத்தினரைச் சந்திக்காமல் சென்றுவிட்டனர். ஊடகத்தினர் கேட்டபோதும் அது குறித்து பதில் அளிக்காமல் தவிர்த்தனர்.

இது ஐ.சி.சி ஒழுங்கு விதிமுறை மீறல் என்பதால் இலங்கை அணிக்கு அபராதம் விதிப்பது குறித்து ஐ.சி.சி ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து ஐ.சி.சி செய்தித்தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், “ஐ.சி.சி விதிமுறையின்படி, போட்டி முடிந்தபின் தோற்ற அணியும், வெற்றி பெற்ற அணியும் ஊடகங்களைச் சந்தித்து பேட்டி கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறியது இலங்கை அணியின் தவறாகும்.

இந்தத் தவறுக்கு நிச்சயம் இலங்கை அணிக்கு தண்டனை உண்டு. அதிகபட்சமாக தடை விதிக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கை அணியின் முகாமையாளர் ஹசந்தா டி மெல் ஐ.சி.சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் 10 அணிகளையும் சமமாக நடத்த வேண்டியது ஐ.சி.சியின் பொறுப்பாகும். ஆனால், ஒவ்வொரு அணியையும் அவர்களின் தரத்துக்கு ஏற்ப நடத்துவது மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது.

இலங்கை அணிக்கு ஒருவகையான ஆடுகளத்தையும், மற்ற அணிகளுக்கு ஒரு வகையான ஆடுகளத்தையும ஐ.சி.சி அமைக்கிறது. அதுமட்டுமல்லாமல் போதுமான பயிற்சி வசதி இல்லை, போக்குவரத்து வசதி இல்லை, உலகத்தரத்தில் விளையாடும் அணிகளுக்கு தங்கும் வசதி கூட மோசமான நிலையில் உள்ளது.

இலங்கை போன்ற சிறிய அணிகளுக்கு சாதாரணப் பஸ், மற்ற அணிகளுக்கு டபுள்டெக்கர் சொகுசு பஸ். ஹோட்டலில் தங்கும்வசதியும் முறையாக இல்லை, வீரர்களுக்கான நீச்சல் குளம் இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.

Mon, 06/17/2019 - 05:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை