ஈரான் உயர்மட்ட தலைவரை இலக்கு வைத்து அமெரிக்கா புதிய தடைகள்

ஈரான் உயர்மட்டத் தலைவர் அலி கமனெயனின் அலுவலகம் உட்பட ஈரான் மீது கடும் தடைகளை விதித்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது மற்றும் “ஏனைய மற்ற விடயங்கள்” தொடர்பிலேயே ஈரான் மீது இந்த மேலதிக தடைகள் விதிக்கப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் உச்ச நிர்வாகியாக இருக்கும் ஆயதுல்லா கமனெய் ஈரான் அரசின் விரோதச் செயல்களின் இறுதிப் பொறுப்புக் கொண்டவராக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர வாயில் முழுமயாக மூடப்படுவதாக ஈரான் வெளியூறவு அமைச்சர் ஜவத் சாரிப் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகம் போர் தாகத்தில் இருப்பதாகவும் அவர் ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அண்மைய வாரங்களில் மோசமடைந்துள்ளது. ஆனால் பில்லியன் டொலர்களை முடக்கும் டிரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார்.

ஐ.நா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர். எட்டு ஈரானிய இராணுவ தலைவர்கள் இந்த தடையால் பாதிக்கப்படுவர் என அமெரிக்க கருவூலத் துறை கூறுகிறது.

வெளியுறவு அமைச்சர் சாரிப் மீதும் இந்த வாரத்திற்குள் இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார். சேதட் என்னும் நிறுவனம் ஒன்று அலி கமனெய் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் 1979 புரட்சிக்குப் பின்னர் கைவிடப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி 95 பில்லியன் டொலர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறியது.

செதட் மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது. ஆனால் டிரம்ப் இன்னும் முடக்க வேண்டுமென நினைத்தால் அயத்துல்லாவோடு தொடர்புடைய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையே இதற்குள் கொண்டுவரவேண்டும்.

எண்ணெய்க்கும் நிதி பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தீவிரத்தடை விதித்து அமெரிக்க அரசு அனைத்து பக்கங்களிலிருந்தும் நெருக்கடி கொடுப்பதால் ஈரான் தோல்வியை ஒப்புகொண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது அமெரிக்க அரசு.

ஈரான் அணு தொடர்பான வேலையை நிறுத்திக் கொண்டு ஏவுகணை தயாரிப்பை முடக்கிவிட்டு அரபு நாடுகளுக்கு இராணுவ உதவி செய்யாமல் இருப்பதே அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பொம்பியோ, ஈரானிய அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமென நம்பிக்கையில்லை என கூறியுள்ளார்.

அயத்துல்லா அலி கமனெய் மேல் விதிக்கப்பட்ட இந்த தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் ஈரானிய நாட்டின் அதி உயர் தலைவர் ஆவதால் அவருடைய வார்த்தையே ஈரானிய அரசியலிலும் இராணுவத்திலும் கட்டளையாக ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவரிடம் பொருளாதார சக்தி அதிகம் உள்ளது.

2015 அணு ஒப்பந்தத்தின் படி நீக்கப்பட்ட அனைத்து தடைகளையும் மீண்டும் ஈரான் மீது 2018ஆம் ஆண்டு சுமத்தியது அமெரிக்கா.

இதன் காரணமாக மோசமாக ஈரான் பாதிக்கப்பட்டது. ஆற்றல், கடல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை பாதிக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கு பின்னர் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் தந்தது அமெரிக்கா.

அமெரிக்க அரசு அமெரிக்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு நிறுவனங்களையும் ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதை தடுத்தது.

இதனால் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் அணையாடைகள் போன்ற வெளிநாட்டு பொருட்களால் செய்யப்படும் பலபொருட்களின் பற்றாக்குறை இருந்தது.

நாட்டின் நாணய மதிப்பு சரிந்ததோடு எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்பிய நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து ஈரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை