வெற்றி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட மேற்கிந்திய தீவுகள்

நியூசிலாந்துடனான பரபரப்பான உலகக் கிண்ண லீக் போட்டியில் நூலிழையில் வெற்றியை தவறவிட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய பிரத் வெயிட் வெற்றிக்காக சிக்சர் ஒன்றை பெற முயன்றபோது அந்தப் பந்து பெளண்டரி எல்லையில் பிடியெடுப்பாக மாறியது.

ஓல்ட் டிரபர்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 292 ஓட்டங்களை துரத்திய மேற்கிந்திய தீவுகள் 164 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலிருந்து மீண்ட அந்த அணி கடைசி 18 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது.

எனினும் 48 ஆவது ஓவரில் பிரத்வெயிட் சிக்ஸர் ஒன்றையும் பெளண்டரி ஒன்றையும் பெற்றதால் 12 பந்துகளுக்கு எட்டு ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது.

வெற்றிக்கு ஆறு ஓட்டங்கள் தேவைப்படும்போது பிரத்வெயிட் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்தே அவர் கடைசி விக்கெட்டாக ஏமாற்றத்துடன் ஆட்டமிழந்தார்.

இந்தத் தோல்வியோடு மேற்கிந்திய தீவுகள் அணி பெரும்பாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்திருப்பதோடு முதலிடத்திற்கு முன்னேறி இருக்கும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் கேன் வில்லியம்ஸின் 148 ஓட்டங்கள் மூலம் மீட்சி பெற்றது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை